தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக தங்களது கோரிக்கைகளுக்காக போராடி வந்த சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு இனிப்பான செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பணி நிறைவு கால பலன்களை அதிரடியாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுவரை சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. தற்போதைய புதிய அறிவிப்பின்படி, இந்த தொகையில் ரூ.1,400 உயர்த்தப்பட்டு, இனி மாதம் ரூ.3,400 ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் பணி ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்த பணப்பயன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அலுவலர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, சிறப்பு காலமுறை பெறும் ஊழியர்களுக்கு இந்தச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சலுகைகள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மட்டுமல்லாது, குறு அங்கன்வாடி பணியாளர்கள், வனக் களப்பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், பணியின் போது ஊழியர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான செலவுத் தொகையும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
உயர்த்தப்பட்ட இந்த நிதிப் பலன்கள் அந்தந்த துறைகளின் கீழ் உள்ள கணக்குத் தலைப்புகளில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அதற்கான கூடுதல் செலவினங்களை சம்பந்தப்பட்ட துறைகளே ஏற்கும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது. நீண்டகாலமாக தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களுக்கு, அரசின் இந்த அறிவிப்பு ஒரு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
