சேலம் மாநகரின் வளர்ச்சியை பிரதிபலிக்க வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் இன்று பாதுகாப்பு குறைபாடுகளால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மையம், தற்போது சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
வணிகக் கடைகள் பூட்டியே கிடப்பு
மேல் தளங்களில் அமைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கடைகள் பல ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் பூட்டியே உள்ளன. இதனால் அந்த இடங்கள் பராமரிப்பின்றி சீரழிந்து, சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட இடங்கள் செயல்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
கஞ்சா, மது, ஒழுங்கற்ற செயல்கள்
மேல் தளங்களில் சிதறிக்கிடக்கும் மதுபாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் உள்ளிட்ட பொருட்கள் அங்கு நடைபெறும் சட்டவிரோத செயல்களை உறுதிப்படுத்துகின்றன.
குறிப்பாக கஞ்சா விற்பனை, மது அருந்துதல் மற்றும் பாலியல் தொழில்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட இந்த பகுதியில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
CCTV கேமராக்கள் சேதம்
பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் திட்டமிட்டு உடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கண்காணிப்பு இல்லாத சூழல் உருவாகி, குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் அதிகம் வருகை தரும் இடத்தில் இத்தகைய நிலைமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
நடவடிக்கை எப்போது?
மாநகராட்சிக்கும் காவல்துறைக்கும் பலமுறை மனுக்கள் அளித்தும், தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பூட்டிக்கிடக்கும் கடைகளை உடனடியாக ஏலத்தில் விடுவது மற்றும் நிரந்தர காவல் பணியை அமல்படுத்துவது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொதுச்சொத்துக்கள் பாதுகாப்பாகவும், பொதுமக்கள் நிம்மதியாகவும் பயன்படுத்தக்கூடிய இடமாக மாற்றுவது அரசு மற்றும் அதிகாரிகளின் பொறுப்பாகும். சேலம் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் மீண்டும் அதன் அடையாளத்தை பெற, உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின்தேவை ஆகும்.
