திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமண தகவல் மையம் மூலம் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. அகஸ்டின் பைனான்சியல் தொழில் செய்து வருவதாகக் கூறப்பட்டது. நல்ல மாப்பிள்ளை என நம்பி பெண் வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். கடந்த நவ. 23ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணமான முதலிரவு அன்று, "முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வோம், பின்பு தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்" என இளம்பெண் கூறியுள்ளார். மறுநாள் இரவும் இதேபோல் தாம்பத்தியம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குற்றச் செய்தி: கணவன் கைது
இதில் ஆத்திரமடைந்த கணவர் அகஸ்டின் , சுத்தியலை எடுத்து மனைவியைத் தாக்கி, பின்னர் ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட புது மணப்பெண் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தகவலின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அகஸ்டின் ஜோஷ்வாவை கைது செய்தனர்.
குற்றச் செய்திகள்: ஏற்கனவே இரு பெண்களுக்கு சித்ரவதை
விசாரணையில், இவர் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் 'லிவிங் டூ கெதர்' உறவில் இருந்து அவர்களைச் சேர்ந்தவர் சித்ரவதை செய்தது அம்பலமானது. அந்த விவரங்களை மறைத்துதான் இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். "திருமணத்தின்போது என்னை அவமதித்தார்கள், இவளும் சம்மதிக்காததால் ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டேன்" என அகஸ்டின் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச் செய்தி: போலீசார் வழக்குப்பதிவு
இதையடுத்து, சிறை வைத்தல், ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அகஸ்டின் ஜோஷ்வா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் அகஸ்டினை சிறையில் அடைத்தனர். மேட்ரிமோனியல் மூலமாக வரன் பார்த்து தங்கள் மகளை மனநோயாளிக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டோமே என மணமகள் வீட்டார் வேதனை தெரிவித்தார்.
