தனியார் டிடெக்டிவ் துறையில் பணியாற்றும் பெண் டிடெக்டிவ் வினோதினி, தான் சந்தித்த விசித்திரமான வழக்குகள் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
பெண்கள் பொதுவாக ஈடுபட விரும்பாத இந்தத் துறையில் தான் ஏன் இன்று தொடர்கிறேன் என்பதை விளக்கிய அவர், “இது எனக்கு வேலை அல்ல… என் பொழுதுபோக்கு, என் விளையாட்டு” என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
குழந்தைப் பருவத்திலேயே தெரியாத விஷயங்களுக்கு விடை கண்டுபிடிப்பது தனக்கு பெரும் சுவாரசியம் அளிப்பதாகவும், இதை ஒரு வேலையாகவே உணர்ந்ததில்லை என்றும் வினோதினி தெரிவித்தார். “பெண்கள் இந்தத் துறையில் வருவது அரிது. ஆனால் எனக்கு இது முழு விருப்பத்தின் பேரில் செய்யும் விஷயம்” என்றார்.
இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்த மிகப் பெரிய விசித்திர வழக்கு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு நாள் தம்பதியர் ஒருவர் அவரைத் தொடர்புகொண்டனர். தங்களது மகளின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாகவும், அவள் வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் கூறினர்.
ஆனால் அவள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை – ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலை கொண்ட மேக்கப் சாதனங்கள், உடைகள் என அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். “பிறந்தநாளுக்கு தோழி வாங்கிக் கொடுத்தாள்”, “ஆன்லைனில் பரிசு” என்று மகள் சொன்னாலும் பெற்றோருக்கு சந்தேகம் வந்தது.
இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட வினோதினி, அந்தப் பெண்ணை மூன்று வாரங்கள் தொடர்ந்து கண்காணித்தார். “பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவள் திட்டமிட்டு செயல்பட்டாள். எங்களுக்கே மூன்று வாரம் ஆனது” என்று வினோதினி நினைவுகூர்ந்தார்.
விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியானது. அந்த இளம்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார், அது ஒரு குழு சம்பந்தப்பட்ட விவகாரம் தெரியவந்தது. வயதான ஆண்களை மட்டும் குறிவைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் வழக்கம் இந்தக் குழுவினருக்கு இருந்தது.
“இளைஞர்களுடன் உறவு கொள்ளும்போது வலி அதிகம், மூர்க்கத்தனம் அதிகம் என்ற காரணத்தால் வயதானவர்களைத் தேர்வு செய்தனர்.
அந்தப் பெண் மட்டுமல்ல, அவரது தோழிகள் உட்பட பல இளம்பெண்கள் இந்தக் குழுவில் இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் ஒரு தோழியின் தூண்டுதலால் ஒரு முறை ஈடுபட்ட அந்தப் பெண், புகைப்படங்களை வைத்து மிரட்டப்பட்டு தொடர்ந்து இந்தத் தொழிலில் தள்ளப்பட்டார். பின்னர் பணத்தின் மீதான ஆசையில் தானாகவே தொடர்ந்தார்.
வினோதினியின் குழு அந்தப் பெண்ணிடம் தெளிவாக பேசி, அவரை குழுவிலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தது. அந்தக் குழுவை இயக்கிய பெண்ணை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மனநல ஆலோசனை மற்றும் குடும்ப ஆதரவுடன் அந்தப் பெண் இப்போது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.
“உரிய நேரத்தில் பெற்றோர்கள் எங்களை அணுகியதால் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அழிந்து போகாமல் தடுக்கப்பட்டது. இல்லையென்றால் அவள் வேறு பாதையில் சென்றிருப்பாள்” என்று உணர்ச்சியுடன் கூறினார் வினோதினி.
பெண் டிடெக்டிவ்களின் சவால்களைப் பற்றியும் அவர் பேசினார். "இந்தத் துறை மிகவும் சவாலானது. இரவு நேரக் கண்காணிப்பு, தொடர்ந்து பின்தொடர்தல், உயிருக்கு ஆபத்து... ஆனாலும் எனக்கு இது ஒரு வேலை அல்ல, என் ஆர்வம்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
வினோதினியின் இந்த வெளிப்பாடு, தனியார் டிடெக்டிவ் துறையின் முக்கியத்துவத்தையும், இளம் பெண்களை குறிவைக்கும் சமூக விஷயங்களையும் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
